Sunday, July 4, 2010

கடவுளைக் கொல்லுதல்












காட்டு யானைகளின்

பிளிறல் ஓய்ந்திருக்கும்

விழிப்புக்கும் உறக்கத்திற்கும்

இடைப்பட்ட இத்தருணத்தில்

கடவுளைக் கொல்வதென

முகங்கழுவிக் கொண்டு

கருப்புக்குதிரை மீதேறிப்

பிரயாணமாகிறேன்

போர்விமானங்கள்

கண்ணிவெடிகள்

துரோகங்கள்

தூக்குமரங்கள்

கொலைகள்

வன்புணர்ச்சிகள்

உறைந்து கிடக்கும்

குருதிப் படலங்கள்

போதி மரத்தடியில்

சிரிக்கும் புத்தன்

குருதி வெள்ளத்தில்

துடிக்கும் காந்தி

கலவி கொண்ட நிலையில்

சிதறிக்கிடக்கும் சர்ப்பங்கள்

யுகங்கள் தாண்டிக்

கடவுளைக் காண்கிறேன்

படைத்த களைப்பில்

நித்திரையில் கடவுள்

ஆதிப்புணர்ச்சிக்கு தயாராய்

அங்கங்கள் மறைத்தபடி

வெட்கத்தில்

ஆதிமனிதனும் மனுஷியும்

ஆப்பிளின் மிச்சதைப் புசித்து

ஆதிமனிதனையும் ஏவாளையும்

சர்ப்பத்தையும்

கழுத்தறுத்துக் கொன்று

சூன்யமாகிக் கொண்டிருக்கிற

என்னை நோக்கிப்

புன்னகைக்கிறார் கடவுள்.

1 comment: